ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்று குட்டியாய் இருக்கும்போது ஒரு கதை படித்த, கேட்ட நினைவு இருக்கிறது. அதற்கப்புறம் தினத்தந்தியின் சிந்துபாத் சித்திரத் தொடர்கதைதான். மூன்று அல்லது நான்கு கட்டங்களின் படம் வரைந்து சிந்துபாத் மூக்குச் சிந்துவதை மூன்று மாதங்களுக்கு எழுதுவார்கள். இன்னமும் வந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் என்று கிளுகிளு டைட்டிலைப் படித்ததோடு சரி. அதை மஸ்கட்டிலிருந்த இரண்டாயிரம் இரவுகளிலும் படிக்கவில்லை.
திடீரென்று 2005-இல் பாலுவை பாஸ்டன் (சும்மா ஒரு பா பா எதுகைக்காக பாஸ்டன் - ஆக்சுவலி நிகழ்ச்சி நடந்தது நேட்டிக் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில்) நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது முதன்முறையாக சந்திக்க முடிந்தது கனவு போல நினைவிருக்கிறது. ஆயர்பாடி மூலம் உறங்க வைத்ததிலிருந்து கண்ணால் பேசும் பெண்ணேவால் காதலை உணரச் செய்தது வரை தன் குரலால் பேசி மயக்கும் ஒரு பெரும் பாடகரை - வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் பாடல்கள் மூலம் இயைந்திருக்கும் ஒரு சகாப்தத்தை - எதிர்பாராத இடத்தில் சந்திப்பேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. அந்த நிகழ்ச்சி முழுதும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, காதுகள் அந்தக் கம்பீரக் குரலை அணுவணுவாக ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்க பிறகு இரவு உணவு சந்திப்பின் போது அவரிடம் மலர்கொத்து கொடுத்து கையெழுத்துவாங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டதெல்லாம் என் வாழ்வின் முக்கிய பக்கங்கள். மனசுக்குள் ”ஒரே நாள் உனை நான் பாடும் நிலாவாய் பார்த்தது, உலாவும் உன் குரலின் இளமைதான் ஊஞ்சலாடுது” என்று பாடிக்கொண்டிருந்தேன்.
பிறகு 2006-இல் விளையாட்டாய் ஆரம்பித்தது இந்தத் தளம். முதலில் மிகவும் ரசித்த முக்கியமான பாடல்களைப் பதிவது என்று நினைவிலிருந்த இனிய அனுபவங்களையெல்லாம் கொட்டித் தீர்த்தேன்.
பிறகு வந்தார்
கோவை ரவீ என்ற இனிய நண்பர். இதற்குமுன்பு இணையத்தில் எழுதியதேயில்லை என்று சொல்லிவிட்டு அவர் இன்றுவரை செய்திருக்கின்ற பங்களிப்பு நம்ப முடியாதது. 2008-இல் அவரை நேரில் சந்திக்கமுடிந்தது. எளிய இனிய மனிதர். சத்தமில்லாமல் பல உதவிகளை ஏழை எளியவர்களுக்குத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார். பலவித வேலைகளுக்கு நடுவிலும் தொடர்ச்சியாக மிக அரிதான பாலுவின் பாடல்களைத் தேடிப்பிடித்து அயராமல் பதிந்து வரும் அவரில்லாவிட்டால் இந்தத் தளம் இதுவரை வந்திருக்கவே வந்திருக்காது. அவருக்கு நன்றி என்று ஒருவார்த்தையில் மட்டும் நன்றி சொல்லிமுடிக்கமுடியாது.
இந்தத் தளத்தினால் கிடைத்த மற்றும் சில நண்பர்கள் முக்கியமானவர்கள். பாலுவின் பெயரை வைத்துக்கொண்டு பலமுகங்களில் வந்து தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு, தவறாக எழுதும்போதெல்லாம் தலையில் குட்டி சுட்டிக்காட்டும்
பாலசுப்ரமணியம் என்ற இன்னொரு பாலு பற்றி. பாடல்கள், பின்னூட்டமெல்லாம் இருக்கட்டும். இந்த இளைஞர் (ஹலோ கிழவா! போனால் போகட்டும். உன்னை இளைஞனென்றே சொல்லிக்கொள்கிறேன்) சத்தமின்றி செய்யும் சில காரியங்கள் பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வரவேண்டியவை.
http://www.prodigyhub.org/ என்ற தளத்தின் மூலமாக மாநில அளவில் சாதித்த மாணவமணிகளை ஒருங்கிணைத்து சக மாணவர்களுக்கு தங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளச் செய்திருக்கிறார். பெரிய விஷயம் இது! அவரின் இம்முயற்சி தேசிய அளவு, உலக அளவு விரிவடைந்து அதன்று இன்னும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துவோம். Prodigy பாலு, உங்களை நண்பனாகப் பெற்றதில் பெருமையடைகிறேன்.
தசாரதி - தமிழில் தொடங்கப்பட்ட இந்தத் தளம் தமிழ்பேசுவோருக்கு மட்டும் என்ற அளவில் சுருங்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்
ஆங்கிலத்திலும் ஒன்றைத் துவக்கியதும் அதில் தொடர்ச்சியாக பதிவுகள் வருவதற்குக் கைகொடுத்தவர் தசாரதி. Prodigy பாலுவின் நேர்த்தியான பல கட்டுரைகளும் அந்தத் தளத்தில் வந்திருக்கின்றன. இவர்கள் இருவரும் இன்னும் நிறைய பதிவுகளைப் பதியவேண்டும் என்பது என் அவா.
Zakaas4u என்ற முகவரியில் எழுதும் Vikas என்ற இளைஞர் இன்னொரு ஆச்சரியம். இவருக்கு எந்த தென்னிந்திய மொழிகளும் தெரியாது. இன்னாம்மே, தெர்தா, குந்து, உய்ய்ய்ய் (விசில்) என்று பல படங்களில் கமல் லுங்கி கட்டிக்கொண்டு பேசும், சென்னையிலும் பேசப்படும் பாஷை என்று ஒன்று இருப்பது சத்தியமாக அவருக்குத் தெரியாது. மும்பையில் உட்கார்ந்துகொண்டு பாலுவின் மீது தீராத அன்புடன் தீவிர ரசிகனாக இருக்கும் இவர் ஆச்சரியமில்லாமல் என்ன? Creative Worksஇல் இவர் திறமையானவர். இந்தத் தளத்தின் நெற்றியில் நீங்கள் காணும் கடல், நிலா, பாலு என்ற பொன்னியின் செல்வன் காட்சி மாதிரி தோன்றும் சித்திரக்கலவை இவர் கைவண்ணத்தில் உருவானதே.
அசோக் - Accounting and Finance என்று ஒரு பாவப்பட்ட துறையில் Debit the Receiver, Credit the Giver என்று பழியாய் கிடக்கும் ஆசாமி. HCL இல்(லில்தான் இன்னும்) பணிபுரிகிறார் (என்று நினைக்கிறேன்). SPB Foundation என்ற லாபநோக்கற்ற சேவை அமைப்பை உருவாக்கி ரசிகர்கள் அளித்த நன்கொடை மூலம் ஆதரவற்ற முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பலவிதமான பொருளுதவிகள் உதவிகளை முன்னணியிலும் பின்னணியிலும் நின்று இயக்கும் நபர். இவரிடம் ஓரிருமுறை தொலைபேசியிருக்கிறேன்.
பாலு ரசிகர்களின் யாஹூ இணையக்குழுமத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். SPB Foundation-இன் கணக்கு வழக்குகளையும் கவனித்துக்கொள்கிறார்.
ஒரு மாதம் முன்பு பார்த்த போது கூட தொள்ளாயிரத்தில்தான் இருந்த மாதிரி இருந்தது. திடீரென்று வந்து பாடும் நிலா ஜோதியில் ஐக்கியமாகி கடகடவென்று ரவீயுடன் போட்டி போட்டுக்கொண்டு பாடல்களைப் பதிவு செய்து ஆயிரத்துக்கு இழுத்துவிட்டதில் SAGA பதிவரின் பங்களிப்பும் உண்டு. ரவீ யாரிந்த SAGA என்று கேட்டு அலுத்துவிட்டார். ரவீ ஜூனில் வரும் போது நேரில் சொல்கிறேன் :-).
SAGA வுக்கு நன்றிகள். தொடர்ந்து பதியுங்கள்.
இம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு கிரியா ஊக்கியாக இருப்பது பாடும்நிலாவின் சிறப்பு. பாடல்கள் கேட்பதோடு நின்றுவிடாமல் நாம் வாழும் சமூகத்திற்கு நம்மால் எதாவது செய்யவேண்டும் என்று நினைப்பதோடும் நின்றுவிடாமல் செயலிலும் காட்டியிருக்கும் இவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரிகள். இவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
அப்படியிப்படி என்று ஆயிரமாவது பதிவு வந்தாகிவிட்டது. ஆயிரம் பதிவா என்று லேசான மலைப்பு எழுந்தாலும், 36000 பாடல்களுக்கு மேல் பாடிவிட்டு - off the record ஆக பல ஆயிரம் பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் இன்னும் பாடிக்கொண்டிருக்கும் - அறுபதைத் தாண்டினாலும் அயராது இன்று வரை உழைத்துக்கொண்டிருக்கும் பாலுவை நினைக்கும் போது, ஆயிரம் பதிவெல்லாம் கொசு மாதிரி தோன்றுகிறது.
”பாலுவோட குரல் அப்படியே மாறாம இருக்கே” என்று நாங்கள் ஆச்சரியக் குரல் எழுப்பும் போதெல்லாம் ஹரன் பிரசன்னா வந்து “இப்படிச் சொல்வதெல்லாம் ஒரு கிளிஷே” என்பார். நாலு கழுதை வயசானாலும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் என்றும் குழந்தைகளே. பாலுவின் ஆயிரம் நிலவே வா என்ற நாற்பது வயதான பாடலையும் கண்ணால் பேசும் பெண்ணே என்ற நான்கு வயதான பாடலையும் கேட்டுப் பாருங்கள். குரலில் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால் இனிய வித்தியாசம். பாலு ஓர் ஆடி ரொங்கும் பம்பரம் மாதிரி. ஆரம்பத்தில் ஆடும் பம்பரம் நிலைகொண்டதும் ஆடாதிருப்பது போலத் தோன்றும். ஆனால் ரொங்கிக் கொண்டிருக்கும். பாலு ரொங்கும் பம்பரம் போல. நாற்பதாண்டுகளுக்கு மேலாப் பாடிக்கொண்டிருக்கும் பாடர்கள் உலகில் மிகச் சிலரே. அதிலொருவராக ஒரு இந்தியர் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே.
நம் நாட்டில் எத்தனையோ மிகச் சிறந்த பாடகர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அவர்களில் பாலு ஒரு தனித்துவமானவர். தெலுங்கு தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பிற மொழிகளில் உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும் என்று அயராது முயற்சி செய்வது போற்றத் தக்கது. கன்னடத் தொலைக்காட்சியில் சுத்த கன்னடத்தில் நிகழ்ச்சியை நடத்துவதென்ன! தமிழில் அழகாகப் பேசி நிகழ்ச்சி நடத்துவதென்ன! அந்தந்த மாநிலத்தவர்கள் இவர் மண்ணின் மைந்தனோ (இது ஸர்டய்ன்லி கிளிஷேதான். ஏனென்றால் மண்ணின் மைந்தர்கள்தான் மொழியைத் தேய்த்துத் துருப்பிடிக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் - குறிப்பாக “மரத்” தமிழர்கள்!) என்று நினைக்கும்வண்ணம் அட்சர சுத்தமாக அவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என்று பேசும்போது பொறாமையாக இருக்கிறது. அவரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, முயற்சி, அடக்கம் என்ற பல்வேறு நல்ல குணங்கள் இக்காலப் “பருவாயில்லை” பாடகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.
மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என்று எல்லா இசை மேதைகளோடு பாலுவும் சேர்ந்து இசைக்கடலில் முக்குளித்துத் தந்த முத்துகள் எத்தனையெத்தனை! ஆயிரக்கணக்கான சாகாவரம் பெற்ற பாடல்கள்.
பொன் மாலைப் பொழுதில் மடைதிறந்து தாவும் நதியலையைப் பார்த்துக் கொண்டே
தீர்த்தக் கரையினில் உட்கார்ந்து
நிலாவே வா செல்லாதே வா என்று
நான் பாடும் மௌன ராகத்தைக்
கூட்டத்திலே கோவில் புறாவாவது கேட்குமா என்றால்
என்ன சத்தமிந்த நேரம் என்று
ராகங்கள் பதினாறு உருவான வரலாறைக்
கண்ணால் பேசும் பெண்ணிடம்
காதல் ரோஜாவைக் கொடுத்து
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கலாமா என்று நினைக்கையில்
இளைய நிலா பொழிந்து
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் சேர்ந்து
கவிதை பாடு குயிலே என்று
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணை
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் என்று
கண்ணுக்குள் நூறு நிலவாக
ஒரு நாளும் உனை மறவாதிருந்தாலும்
எனைக் காணவில்லையே நேற்றோடு என்றும்
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை என்றும் பதைத்துப் போய் இறுதியில்
உன்னைக் கண்டபின்புதான் என்னைக் கண்டுகொண்டேன் பாலுவே என்று நினைப்பதெல்லாம்
குழந்தை பாடும் தாலாட்டாகத்தான் இருக்கிறது.
இந்தத் தளம் ஆரம்பித்து கடந்த நான்கு வருடங்களில் பலவித அனுபவங்கள். தொலைக்காட்சியில் பாலுவை முதன்முதலில் தொடர்ச்சியாகப் பார்த்தது என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சி மூலமாக. “நான் சங்கீதம் முறைப்படிக் கற்றுக்கொள்ளாதது குறை” என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் ஒரு பையனோ பெண்ணோ அட்டகாசமாக பாடிவிட்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருக்கையில் ”சரணத்துல அந்த “கோடையில் ஒரு நாள்... நநநநநா... ம்...கோலத்தில்.... நநநா நநநநநா...“ அந்த லைனை திரும்பப் பாடுங்க” என்று கேட்டு, போட்டியாளர் அதைத் திரும்பப் பாடவும் நநநாவில் அவரை நிறுத்தி ”இந்த இடத்துல ஒரு சின்ன சங்கதியை விட்டுட்டீங்க” அல்லது ”அதுல (விரல்களைக் குவித்து கண்ணருகில் வைத்துக்கொண்டு ஒற்றைக் கண்ணால் பார்த்து) ஒரு கால் மாத்திரை கொறையுது. அதைச் சரிபண்ணீட்டீங்கன்னா பர்ஃபெக்டாயிடும்” என்று வலிக்காமல் ஊசி போடுவதைப் பார்த்தால் இவருக்கு முறைப்படி சங்கீதம் தெரியாது என்பதை எந்த கோயான் கோபுவாவது நம்புவானா என்று தோன்றிற்று. இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களை அழவைப்பததையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு விமர்சனம் என்ற பெயரில் அவமானப் படுத்தும் நடுவர்களுக்கிடையே பாலு பெரிய இதம். இதமான குரலில் அவர் குறைகளைச் சுட்டிக்காட்டி நிறைகளைத் தட்டிக்கொடுத்து போட்டியாளர்களை உற்சாகப் படுத்துவது மிகவும் அருமை! எவ்வளவோ விருப்பமான பாடல்களை நூற்றுக் கணக்கான முறை கேட்டிருந்தாலும், பாடிப் பார்த்திருந்தாலும் பாலு சொல்லும்போதுதான் அப்பாடலில் பாடகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் பலவித நுட்பங்கள் தெரிய வருகின்றன. “அட ஆமால்ல?” என்று ஆச்சரியம் எழுகிறது. உருப்பெருக்கிக் கண்ணாடியை வைத்துக்கொண்டு குரல்களைக் கேட்கும் எமகாதகனய்யா அவர்!
நன்றாக நினைவிருக்கிறது. ஏதோ ஒரு கிருஷ்ண ஜெயந்தி அன்று திடீரென்று ஆயர் பாடி மாளிகையில் பாடல் தெருவின் மூலையிலிருந்து கசிந்து காற்றில் மிதந்து வர, அப்படியே சொக்கிப் போய் கேட்ட நாட்கள்! அப்படியே தொடர்ச்சியாக பல பாடகர்கள், பாடகிகள் கிருஷ்ணர் பாடல்களைப் பாடியதெல்லாம் தொடர்ச்சியாக வரும். சிலர் பாடுவதைக் கேட்டதில் கிருஷ்ணர் மண்ணைத் தின்றதிலிருந்த நியாயம் புரிந்தது! அதிலிருந்து ஆரம்பத்து ஒவ்வொரு பிராயத்திலும் கேட்ட அவரது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாடல்கள்! பல பாடல்களை இந்த இடத்தில் இந்த நேரத்தில் இவர்களோடு (அல்லது தனியாக) இருக்கையில் கேட்டேன் என்று துல்லியமாக நினைவுகூரத் தக்க வகையில் பசுமரத்தாணிபோல மனதில் படிமங்களாகப் படிந்துவிட்ட பாடல்கள். அந்தக் மந்திரக் குரலின் மாயாஜாலங்கள். பாடல்களின் இடையிடையே சிரித்து, அழுது, கோபப்பட்டு, கம்பீரமாக, சோகமாக, ஜாலியாக என்று பலவித உணர்வுகளை நடிகர்களை மிஞ்சி வெளிக்காட்டி - அவரது அந்த வித்தியாசமான சேட்டைகளுக்காகவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட, இன்றும் விரும்பப்படும் அற்புதமான பாடகர் பாலு. இவரது சிரிப்புக்காகவே பல பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் ஒலித்திருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்பு வந்த ”கேளடி என் பாவையே” என்ற கோபுர வாசலிலே பாடலாகட்டும், இப்போது வந்த “கண்ணால் பேசும் பெண்ணே” என்ற மொழி பாடலாகட்டும் - உடல் வயதானாலும் மனதளவில் பாடிக்கொண்டிருக்கும் இளைஞன் பாலுவை ஆத்மார்த்தமாக உணர முடியும. இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்டுப் பாருங்கள். புரியும்.
நாலு வருடங்களாயிற்று இந்த ஆயிரம் பதிவுகளைத் தொட. அவரின் பாடல்களைப் பதியவேண்டுமென்றால் எங்கள் ஆயுள் போதாது. இம்மாதிரி சாதனையாளர்களுக்கு, வாழும் வரலாறுகளுக்கு, உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது எங்களுக்கு எப்போதும் இருக்கும் குறை. அது எப்போது தீரும் என்று தெரியவில்லை. அவரும் அங்கீகாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த வாரம் அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறார். நியூஜெர்ஸியில் 22-ம் தேதி (தெலுங்கு), 23-ம் தேதிகளில் (தமிழ்) பாட இருக்கிறார். நேனு டெலுகு மாட்லாடனு என்பதால் 23-ம் தேதி செல்லலாம் என்று இருக்கிறேன். அவரை இன்னுமொருமுறை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதான். பார்க்கலாம்.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். பாலுவைப் பொருத்தவரை மூர்த்தி பெரிது. கீர்த்தி மிகமிகப் பெரிது! இவ்வயதிலும் அயராது தொடர்ந்து பாடி என்போன்றோருக்கு ஆசுவாசமாகவும், அன்பும், தோழமையுமாகவும், சினேகமாகவும், குருவாகவும், எல்லாமுமாக இருந்தாலும் தலையில் கொம்புகள் எதுவும் வைத்துக்கொள்ளாமல் அளவு கடந்த அடக்கத்துடனும் இருக்கும் அன்புள்ளம் கொண்ட அந்த நல்மனிதருக்கு, ஆத்மார்த்தமான கலைஞருக்கு, கடின உழைப்பாளிக்கு, எப்போதும் பிறரை மதித்து நடக்கும் பண்புள்ளவருக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டுகிறேன்.
இத்தளத்திற்கு தொடர்ச்சியாக வந்து எங்களது மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உள்ளங்களுக்கு நன்றி.
எமது இப்பயணம் தொடரும்...
*****
நேயர் (நாயர் இல்லை - அது சரி.. ஏனோ அவர்களுக்கு மலையாளிகளைத் தவிர மற்ற தென்னிந்தியப் பாடகர்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. தாஸண்ணாவை விட்டால் நேராக வடநாட்டுக்குத் தாவிவிடுகிறார்கள்) விருப்பமாக ஒரு பாடல் இங்கே. லட்சக்கணக்கான நேயர்கள் பாலுவுக்கு இருக்கிறார்களே என்றெல்லாம் எனக்கு ஒரு கொழப்பமில்லா. பாலுவின் மிகப்பெரிய நேயராக நான் கருதுவது கோவை ரவீ அவர்களைத்தான். அவரது விருப்பமாக ஆயிரமாவது பதிவில் இந்தப் பாடலைப் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன். வழக்கம் போல ஒரு பாட்டில் தேன் குடித்துவிட்டு பாலு பாடிய பாடல் இது. கேட்டுவிட்டு “எப்படி எப்படி” எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். முடிந்தால் உங்கள் வீடடுக்காரம்மாவிடம் அதே போலப் பாடிப் பாருங்கள். அப்படிப் பாடியதால் சப்பாத்திக்கட்டையால் உங்கள் முதுகில் ஏற்படப்போகும் “பின் விளைவு”களுக்கு நான் பொறுப்பல்ல!
அடுத்ததாக இரண்டாயிரமாவது பதிவிற்கு வந்து ”முதல் கும்ப மரியாதை” வாங்கிக்கொள்ளும் ஜமீன் கலாசாரத்திற்கு அடிமையாகாமல் அடிக்கடி பதிவேன் என்பதையும் வாசகர்களுக்கு, நேயர்களுக்கு, சக பதிவர்களுக்கு எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறேன். நன்றிகள் பல.
பாடல்: எப்படி எப்படி (அந்தரங்கம் யாவுமே)
பாடியவர்: யாருன்னு கேட்டா உதை விழும்!
படம்: ஆயிரம் நிலவே வா!
Get Your Own Hindi Songs Player at Music Plugin